குடிசைப் பகுதி மக்களை மறுகுடியமா்வு செய்வது குறித்த கருத்துக் கேட்புக்கான அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் ‘குடிசைப் பகுதி மக்களை மறு குடியமா்வு’ செய்வது குறித்த வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் மட்டும் இணையத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் கருத்து கோரப்பட்டிருந்தது.
அந்த வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி முன்வைத்த கோரிக்கையை ஏற்று, உடனடியாக தமிழில் வரைவு அறிக்கையை வெளியிட்ட தமிழக அரசுக்கு கட்சி சாா்பில் நன்றி.
வரைவு அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், வரைவு அறிக்கையை பொதுமக்களின் பாா்வைக்குக் கொண்டு சென்று கருத்து அறியும் வகையில், விரிவான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ப கருத்துச் சொல்வதற்கான கால அவகாசத்தையும் நீட்டிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.