கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள பொதக்குடி, ஆய்குடி ஊராட்சியை திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாற்றக் கோரி, தமிழக முதல்வருக்கு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.
முஸ்லீம் முன்னேற்றக் கழக பொதக்குடி கிளைத் தலைவர் சாகுல் அமீது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணனுக்கும் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:
நீடாமங்கலம் ஒன்றியம் சேகரை வருவாய் கிராமம் பொதக்குடி ஊராட்சி மற்றும் ஆய்குடி வருவாய் கிராமம் ஆய்குடி ஊராட்சி உள்ளிட்ட இரண்டு ஊராட்சிகளும், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ளது. அந்த இரண்டு ஊராட்சிகளையும், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டதாக மாற்றம் செய்ய வேண்டும்.
கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பூதமங்கலம், அத்திக்கடை உள்ளிட்ட ஊர்கள் அனைத்தும் திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் இருக்கிறது. கூத்தாநல்லூர், அத்திக்கடை உள்ளிட்ட இரண்டு ஊர்களுக்கு இடையில் உள்ள பொதக்குடி ஊராட்சி மற்றும் ஆய்குடி ஊராட்சி என இரண்டு ஊராட்சிகள் மட்டும் தனியாக, மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் இருக்கிறது. இந்த இரண்டு ஊராட்சிகளையும் திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்டதாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.