எடப்பாடி: அதிமுக தொடங்கி 50 ஆண்டு நிறைவடைந்த நிலையில், அதன் பொன்விழா ஆண்டின் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் பொன் விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரட்டூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், ஒன்றிய குழுத் தலைவருமான கரட்டூர் மணி அதிமுகக் கொடியினன ஏற்றி வைத்து, ஏழை எளியோர்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். மூல பாதை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
கோரணம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையிலான அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, எளியோர்களுக்கு நல உதவிகளை வழங்கினர். எடப்பாடி நகரப் பகுதியில் நடைபெற்ற அதிமுக பொன்விழா நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் ஏ.எம்.முருகன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்றத் தலைவர் டி.கதிரேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் கந்தசாமி, நாராயணன் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்