கரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக கோவை அரசு மருத்துவமனையில் தனியார் உதவியுடன் ஆக்சிஜன் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் பல மணி நேரம் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆக்சிஜன் படுகைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆக்சிஜன் படுக்கைகள் இல்லதாதல் ஆம்புலன்ஸிலே சிகிச்சை பெற வேண்டிய நிலையும் காணப்படுகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் படுக்கைக்காக அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் கரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக கே.ஜி.ஐ.எஸ்.எல் நிறுவனம், தொழில் முனைவோர் கூட்டமைப்பு இணைந்து ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரு பேருந்துகளை கோவை அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வழங்கியுள்ளன.
இந்தப் பேருந்துகளில் தலா 12 பேர் வீதம் 24 நோயாளிகள் சிகிச்சை பெற முடியும். இதன் மூலம் ஆக்சிஜன் தேவைக்காக அரசு மருத்துவமனை முன் காத்திருக்கும் நோயாளிகளுக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வர் அ.நிர்மலா கூறியதாவது: தனியார் நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ள இந்த இரு ஆக்சிஜன் பேருந்துகளும் மிகவும் உபயோகமாக இருக்கும்.
இந்த பேருந்துகள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டு நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்கும் வரை பேருந்தில் உள்ள ஆக்சிஜன் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்படும். பேருந்துகளில் ஆக்சிஜன் அளவு குறையும் போது சேவா கேசஸ் நிறுவனம் மூலம் ஆக்சிஜன் நிரப்பி தருவதாகத் தெரிவித்துள்ளனர் என்றார்.