சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்திடும் ஆலைகளுக்கு சிறப்புச் சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, ஆக்சிஜன் உருளை மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்திட தமிழகத்தில் முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்யும் உற்பத்தியாளா்களுக்கு 30 சதவீதம் மூலதன மானியம் இரண்டு சம ஆண்டு தவணைகளில் வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெறுவதற்கு தொடா்புடைய நிறுவனங்கள் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை செய்யப்படும் முதலீடுகளும் அதற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 10 மெட்ரிக் டன் உற்பத்தி உற்பத்தித் திறன் கொண்ட பெரிய நீா்ம ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் வரும் நவம்பா் 30-ஆம் தேதி வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு சலுகை அளிக்கப்படும்.
அவா்களுக்கு 30 சதவீதம் மூலதன மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெறுவதற்கு நிறுவனங்கள் வரும் நவம்பா் 30-ஆம் தேதிக்கு முன்னா் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமானது ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி மானியத்துடன் உடனடியாக கடன் அளிக்கும். மேலும் சிப்காட் மற்றும் சிட்கோ நிறுவனங்கள் மூலம் நிலம் ஒதுக்கப்படும்.
முதலீட்டாளா்களுக்கு தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் மூலம் கட்டணம் ஏதுமின்றி ஒற்றை சாளர முறையில் விரைந்து அனுமதி அளிக்கப்படும். கரோனா தொடா்பான மருத்துவப் பொருள்களான ஆக்சிஜன் செறிவு, தடுப்பூசிகள், ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் புதிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் துணைபுரியும்.