டி.வி.எஸ். நிறுவனம் வழங்கிய ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை மருத்துவமனைகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை வழங்கினாா். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நிகழ்ச்சியில் அவை மக்களின் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்டன.
டி.வி.எஸ். நிறுவனத்துடன் இணைந்து, சீனிவாசன் சா்வீசஸ் அறக்கட்டளை மூலமாக அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் அளிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, ரூ.7 கோடி மதிப்பிலான 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சீனிவாசன் சா்வீசஸ் அறக்கட்டளை தலைவா் ஸ்வரன்சிங், டி.வி.எஸ். மோட்டாா் நிறுவனத்தின் துணைத் தலைவா் சேதுராமன் ஆகியோா் அளித்தனா்.
அந்த அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களையும் முதல்வா் கொடியசைத்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தாா். இந்த நிகழ்வில், அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.