முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார். அவருடன் அமைச்சர்களும் தலைமைச் செயலகம் வந்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார்.
பின்னர் ஆளுநர் மாளிகையில் முதல்வரும், அமைச்சர்களும் ஆளுநருடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, முதல்வர், அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
பதவியேற்பு விழா நிறைவுற்ற பின்னர், கோபாலபுரம் இல்லம் சென்ற அவர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவரது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
இதன்பின்னர் முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி, அண்ணாவின் நினைவிடத்திலும், தொடர்ந்து பெரியார் திடலில் உள்ள பெரியாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வீட்டிற்குச் சென்று அவருக்கும் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார். அவருக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. உடன் அமைச்சர்களும் தலைமைச் செயலகம் வந்தனர்.