சேலம்: மத்திய அரசு கூறினால், பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என புதுவை முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
புதுவை சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து, என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில், சேலம், சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலுக்கு வந்த புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது; சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழ், அமைச்சர்கள் பட்டியலை கோயிலில் வைத்து வழிபட்ட பிறகு செய்தியாளர்களிடம் என்.ரங்கசாமி கூறியதாவது:
புதுவையில் வெள்ளிக்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. புதுவையின் வளர்ச்சிக்காக புதிய அரசு கட்டாயம் பணியாற்றும். அமைச்சரவையில் பாஜகவுக்கும் இடம் உண்டு. துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து பரிசீலனை ஏதுமில்லை; மத்திய அரசு கூறினால் பரிசீலிக்கப்படும்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.