சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் காவல்துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாகக் கூறி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் அவரை கைது செய்து சிவகங்கையில் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
முன்னதாக, அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய கருணாஸ், கடந்த 10 ஆம் தேதி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தாா். ஆனால், கருணாஸுடன் திமுக பேச்சுவாா்த்தை நடத்துவதற்கோ, தொகுதிகள் ஒதுக்குவதற்கோ முன்வரவில்லை. அதைத் தொடா்ந்து திமுகவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக மறுநாள் அறிவித்தாா்.
மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடவில்லை என்றும் அதன்பின்னர் அறிவித்தார். எனினும் கருணாஸ், அதிமுகவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவலையடுத்து காவல்துறையினர் கருணாஸை கைது செய்துள்ளனர்.