புதுவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவிற்கு 4 தொகுதிகள் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பேசிய அவர், புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 30 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணி அமைதியாகவும், ஒருங்கிணைப்பாகவும் செயல்படுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் வாங்காது. முன்னாள் முதல்வர் ரங்கசாமி, நமச்சிவாயம், சாமிநாதன் ஆகியோரின் அனுபவத்தைக் கொண்டு ஒருங்கிணைந்து பணியாற்றி புதுச்சேரியை மத்திய அரசு வளமாக்கிக் காட்டும்.
30 தொகுதிகளில் வெற்றி பெற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இதில் 16 தொகுதிகள் ஒரு சின்னத்திலும், பத்து தொகுதிகள் ஒரு சின்னத்திலும், 4 தொகுதிகள் ஒரு சின்னத்திலும் போட்டியிட்டாலும் 30 தொகுதிகளிலும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றார். தொடர்ந்து பாமகவிடவும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என் ஆர் காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக 4 இடங்களில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.