அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து உடனடியாக உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரிய வழக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்களில் பல வாக்குறுதிகளை அளிப்பது உண்டு. இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள், நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின்படி, தேர்தல் அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. கடந்த 2016-ஆம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேர்தல் அறிக்கைகள் மீது கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்டில் தான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. எனவே தற்போது உடனடியாக உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக வரும் மார்ச் 15-ஆம் தேதிக்குள் பதிலளிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.