சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோயிலில் சிவராத்திரி பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிவபெருமான் காமதேனு வாகனத்தில் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளியில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்வமங்களா சமேத பள்ளிகொண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் சிவராத்திரி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 3-ஆம் தேதி அன்று கோலாகலமாக துவங்கியது. நான்காம் நாளான இன்று சிவபெருமான் பார்வதி தேவியுடன் காமதேனு வாகனத்தில் வீதிவுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக சர்வமங்களா தேவிக்கும் பள்ளிகொண்டேஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிவாச்சார்யார்கள் வேதமந்திரம் ஓத மஹா யாகம் நடத்தப்பட்டது.
விழாவின் சிறப்பம்சமாக நடைபெற்ற கோலாட்டத்தில் பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இதையடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானுக்கும் பார்வதி தாயாருக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ காமதேனு வாகனத்தில் அமர்ந்து பார்வதி தேவியுடன் சிவபெருமான் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்