சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில், சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில், 4 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ 2 கோடியே 20 லட்சத்திற்கு விற்பனையானது.
கடந்த வாரம் 8500 மூட்டை பருத்திகள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில், நிகழ்வாரத்தில் பருத்தி வரத்து பாதியாக குறைந்து, 4 ஆயிரம் பருத்தி மூட்டைகளே விற்பனைக்கு வந்திருந்தது.
பருத்தி அறுவடை குறைந்தது. மற்றும் பொதுத்தேர்தல் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பருத்தி வரத்து பாதியாக சரிந்த நிலையில், சனிக்கிழமை அன்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில், விற்பனைக்கு வந்திருந்த 4 ஆயிரம் பருத்தி மூட்டைகளை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் 750 லாட்டுகளாக பிரித்து, பொது ஏலம் விட்டனர். ஏலத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த வியாபாரிகள், பருத்தி மூட்டைகளை ஏலம் கூறி மொத்த கொள்முதல் செய்தனர்.
இதில் டி.சி.ஹச் ரக பருத்தியானது, குவிண்டால் ஒன்று ரூ.8450 முதல் ரூ.9999 வரை விலைபோனது. அதேபோல் பி. டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 6850முதல் ரூ. 7999 வரை விற்பனையானது. சனிக்கிழமை அன்று நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம், ரூ.2 கோடியே 20 லட்சத்திற்கு பருத்தி வணிகம் நடைபெற்றது. வரத்து குறைந்திருந்தபோதும், அனைத்து ரக பருத்திகளும் கடந்த வார விலையினை ஒட்டிய விற்பனையானதாக, பருத்தி விவசாயிகள் கூறினர்.