சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு, வாக்காளர் தகவல் சீட்டு வழங்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டிற்குப் பதிலாக, வாக்காளர் தகவல் சீட்டு வழங்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில், வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இதில், வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெறாது என்றும் கூறப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நடைபெறும் ஐந்து நாள்களுக்கு முன்னதாக, அனைத்து வாக்காளர்களுக்கும், தகவல் சீட்டை விநியோகம் செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.