ஶ்ரீவைகுண்டம்: தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி செய்துங்கநல்லூரில் மதபோதகர் மோகன் சி லாசரஸ் காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினர் வியாழக்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் பொருட்டு தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ் உத்தரவின்படி பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு, செலவினங்கள் சரிபார்க்கும் கணக்கு குழு ஆகிய குழுவினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு நிலையான கண்காணிப்புக் குழுவினர் செய்துங்கநல்லூர் பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, திருநெல்வேலியில் இருந்து வந்த காரை சோதனையிட்டதில் அதில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் காரில் வந்த நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் மதபோதகர் மோகன் சி லாசரஸிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை நத்தம் நிலவரி திட்ட வட்டாட்சியர் நம்பிராயர் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியருமான கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் அரசு கருவூலத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.