சீர்காழி: சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனை சாவடியில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 7.92 லட்சம் மதிப்புள்ள வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதனடிப்படையில், பறக்கும் படைக் குழு சிறப்பு வட்டாட்சியர் முருகேசன், எஸ்எஸ்ஐ இளங்கோவன் ஆகியோர் கொண்ட தேர்தல் நிலையான சோதனை குழுவினர் சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனை சாவடியில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, சிதம்பரத்தில் இருந்து சீர்காழி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். உரிய ஆவணங்களின்றி அட்டைப் பெட்டிகளில் ரூ.7.92 லட்சம் மதிப்புள்ள வெள்ளி விநாயகர், முருகர் ,நடராஜர், கோமாதா ஆகிய சுவாமி சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வெள்ளி சுவாமி சிலைகளை தேர்தல் நிலையான கண்காணிப்பு சோதனை குழுவினர் பறிமுதல் செய்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சுவாமி சிலைகளை சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், வட்டாட்சியர் ஹரிதரன் ஆகியோர், தேர்தல் துணை வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது சுவாமி சிலைகளை வாகனத்தில் எடுத்து வந்த கோவையைச் சேர்ந்த திருப்பதி மகன் முருகேசன் ( 44) என்பவரிடம், உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்து சிலைகளை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.