சென்னை: அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய பொன்ராஜ், மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக கமல் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று பொன்ராஜ் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கமல் கூறியதாவது, நல்லவர்கள் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். இப்போது நல்லவர்கள், நாட்டுக்காக உழைத்தவர்கள், நேர்மையானவர்கள் அனைவரும் மக்கள் நீதி மய்யத்தைத் தேடி வருகிறார்கள். கலாமின் அறிவியல் ஆலோசகராக செயல்பட்ட பொன்ராஜ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். அவர் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்படுகிறார் என்று அறிவித்தார்.
கலாம் மறைந்த பிறகு, அவரது பணிகளை தொடர்ந்து செய்து, அவரது கனவை நனவாக்க தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இன்று இக்கணம் முதல் இவர் மக்கள் நீதி மய்யத்துக்காகப் பணியாற்றுவார் என்று கமல் அறிவித்தார்.