விழுப்புரம் அருகே உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.7 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டப்பேரவை தொகுதியில் புதன்கிழமை காலை 8 மணியளவில் தேர்தல் பறக்கும் படையினர் அலுவலர் முருகன் தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கண்டமங்கலம் அடுத்த கலித்திரம்பட்டு கூட்டுச்சாலை சந்திப்பில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது அவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.7 லட்சம் இருப்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர், விழுப்புரம் பூந்தமல்லி தெருவைச் சேர்ந்த முத்து (65) என்பதும், தனது சொந்த வேலைக்காக புதுச்சேரிக்கு பணத்தை எடுத்துச் செல்வதும் தெரியவந்தது.
ஆனால், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை வானூர் சட்டப்பேரவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கணக்கு கருவூலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.