கடலூரில் வெட்டுக்காயங்களுடன் தாய்-மகளின் சடலம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்தில் கடலூர்-புதுவை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் நோனாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் மனைவி விஜயலெக்ஷ்மி (48). இவரது மகள் மாதங்கி என்ற சந்தியா (24). திங்கள்கிழமையன்று கடலூர் மாவட்டத்திற்கு உள்பட்ட இடையர் பாளையம் முட்புதரில் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தனர்.
இதுகுறித்து, அப்பகுதியினர் புதுச்சேரி காவல் துறைக்கு தகவல் அளித்தனர். புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டார். சடலம் கிடந்த இடம் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அந்த காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இதனையடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியன், ஆய்வாளர் சரஸ்வதி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.