காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள உள்ளாவூர் கிராமத்தில் புதன்கிழமை 6 வயதுக் குழந்தைக்கு தேநீரில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து விட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட உள்ளாவூர் கிராமத்தில் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி உமா(35) குடும்பப் பிரச்சினை காரணமாக ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு தீபா(6) என்ற மகளும் இருந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்த உமா, சம்பவ நாளன்று வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உட்புறமாக மூடிவிட்டு மகள் தீபிகாவுக்கு தேநீரில் எறும்பு மருந்தை கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் உடனடியாக உமாவும் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீடு பூட்டியே இருப்பதை அறிந்த அருகிலிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து குழந்தை தீபிகா மற்றும் தாயார் உமா உள்ளிட்ட இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் முருகன் மற்றும் அவர்களது உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்