சென்னையில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தார்.
நாட்டில் உருமாறிய டெல்டா பிளஸ் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 4 மாநிலங்களில் 40 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக சென்னையை சேர்ந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கவலையளிக்கக்கூடிய டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மி குறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வழங்கியிருந்தது.