மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் 20 கிராம மக்களுக்கு கரோனா நிவாரண தொகுப்பினை மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி வழங்கி தொடக்கி வைத்தார்.
திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த காஞ்சிரங்குளம், கழுவன்குளம், பிரமனூர் பழையனூர், அல்லிநகரம் முக்குடி, செங்குளம், மாங்குடி, அம்பலத்தாடி உள்ளிட்ட 20 கிராமங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சிகளில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி கலந்துகொண்டு மளிகைத் தொகுப்பு மற்றும் இரண்டாம் கட்ட நிவாரண தொகை ரூ. 2000 வழங்கினார். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இக்கிராமங்களில் தமிழரசி திமுக கொடிகளை ஏற்றி வைத்தார்.
பின்னர் முக்குடி ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசியை ஆய்வு செய்து அங்கிருந்த கூட்டுறவு பணியாளரிடம் விவரம் கேட்டறிந்தார்.
மேலும் பனையூர் - சொட்டதட்டி இடையே பாலம் அமைக்க உள்ள பகுதியை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார். பாலம் அமைக்கும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினர்.
இந்நிகழ்ச்சிகளில் திருப்புவனம் கூட்டுறவு பால் பண்ணை சங்கத் தலைவர் த. சேங்கைமாறன் உள்ளிட்ட திமுகவினர், கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.