தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகளை மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு அறிவித்த தளா்வில் 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக தளா்வுகள் அளிக்கப்பட்டன.
அழகு நிலையங்கள், சலூன்கள் குளிா் சாதன வசதி இல்லாமலும், ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. கோயில்கள், வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிப்பதற்கான தடை தொடருகிறது. அதுபோல பொதுப்போக்குவரத்தும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், கரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகளை மட்டும் இயக்க அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்குவதற்கு ஏற்ப போக்குவரத்து கழகங்கள் ஆயத்தமாக உள்ளதாகவும் இந்த வார இறுதிக்குள் பேருந்து இயக்கத்தைத் தொடக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்து சேவை இருக்கும் வகையில் இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.