மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) காலை தண்ணீரை திறந்து வைத்தார். துவக்கத்தில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்று காலை வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 764 கன அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 96.81 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 96.33
அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 60.18 டி.எம்.சி.யாக இருந்தது.
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி துவங்கியது.