வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் ஆடி 18 விழா குறித்து, கோவில் நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் வெளியிடாததால் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளது குறித்து, தினமணி.காமில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூரில் வசிஷ்டநதிக்கரையில் பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் முதல் தலமான பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 2000 ஆண்டுகள் பழமையானதாக போற்றப்படும் இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் ஆடி 28 தினங்களில் நடைபெறும் சிறப்பு பூஜை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
ஆடி 18 சிறப்பு பூஜை வழிபாட்டில், அதிகாலை முதல் இரவு வரை, சேலம் மாவட்டம் மட்டுமின்றி, நாமக்கல், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலூர், கடலுார் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று பரவல் பொது முடக்கத்தால், ஆடி 18 விழா ரத்து செய்யப்பட்டது.
நிகழாண்டும் கரோனா பொது முடக்கம் நடைமுறையில் உள்ளதால், சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான கோவில்களில் ஆடி 18 விழா ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ஆடி 18 விழா நடைபெறுமா? பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? அல்லது விழா ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து கோவில் நிர்வாகம் வெள்ளிக்கிழமை (ஜூலை,30) வரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பக்தர்கள் குழப்பம் அடைந்தனர்.
எனவே, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஆடி 18 விழா நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து கோயில் செயல் அலுவலர், அறிவிக்க வேண்டுமென்ற பக்தர்களின் கோரிக்கை குறித்து, வெள்ளிக்கிழமை (ஜூலை, 30) தினமணி.காமில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை வழிபாட்டு விழா ரத்து செய்யப்படுவதாகவும், பக்தர்கள் தரிசனத்திற்கு சிறப்பு பூஜை வழிபாட்டு விழா ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.