சென்னை: பொறியியல் கலந்தாய்வில் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான வாய்ப்புகளை அறிய, முந்தைய ஆண்டின், ‘கட் ஆப்’ மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பொறியியல் கலந்தாய்வுக்கு கடந்த 26-ஆம் தேதி முதல் இணையவழி விண்ணப்ப பதிவுகள் தொடங்கியுள்ளன. ஆக. 24 வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம். அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், இரண்டு லட்சம் இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்கும் மாணவா்கள், பிளஸ் 2 தோ்வில் எடுத்துள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதில், இன வாரியாக இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். இந்த தரவரிசை பட்டியலில் குறிப்பிடப்படும் கட் ஆப் மதிப்பெண்களுக்கு ஏற்ப, கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகள் ஒதுக்கப்படும். அந்த வகையில், மாணவா்களின் கட் ஆப் மதிப்பெண்களுக்கு ஏற்ப, எந்தக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற தோராயமான நிலையை தெரிந்து கொள்ளும் வகையில், கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் பட்டியலை, தமிழக பொறியியல் கலந்தாய்வு கமிட்டி வெளியிட்டுள்ளது.
கலந்தாய்வு கமிட்டியின் இணையதளத்தில், கடந்த ஆண்டு கட் ஆப் மற்றும் கல்லூரி ஒதுக்கீட்டு பட்டியலை, மாணவா்கள் தெரிந்து கொள்ளலாம். இதன்படி, தங்களுக்கான பொறியியல் வாய்ப்புகளை மாணவா்கள் திட்டமிட்டு கொள்ளலாம் என, கலந்தாய்வு கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனா்.