வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில், சுகாதாரத் துறை வாயிலாக, குழந்தைகளுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி போடும் முகாம், பேளூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வாழப்பாடி அருகே பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார்.
மருத்துவர்கள் பேரின்பம், சிமி ஆகியோர் குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா நோய் குறித்து, கர்ப்பிணிப் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கினர்.
மருந்தாளுனர் முருகபிரகாஷ், பகுதி சுகாதார செவிலியர்கள் மணிமாலா, அமுதா ஆகியோர், குழந்தைகளுக்கு 6, 14 வாரங்கள் மற்றும் 9 மாதங்களில் இத்தடுப்பூசி செலுத்தப்படுவதின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். நிறைவாக, சமுதாய சுகாதார செவிலியர் ராணி நன்றி கூறினார்.
இதனைத் தொடர்ந்து, வாழப்பாடி வட்டாரத்திற்குள்பட்ட, திருமனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் தகுதியான குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.