72வது குடியரசு நாளையொட்டி சேலம் மாவட்ட பொதுச்சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை, வடுகப்பட்டி அரசு ஆரம்பச்சுகாதார நிலையம், சங்ககிரி, வி.என்.பாளையம் யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் ஆகியவைகளின் சார்பில் ரத்த தான முகாம் வி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சங்ககிரி மருத்துவர் எ.ஜெகந்நாதன், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வி.செல்வராஜ், செயலர் கே.கே.நடேசன், பொருளாளர் என்.மோகன்குமார் ஆகியோர் இம்முகாமினை தொடக்கி வைத்தனர்.
சங்ககிரி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் கே.சண்முகம், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் ரவீந்திரன், வடுகப்பட்டி மருத்துவர் முருகேசன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரத்த தானம் பெறும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
யங்ஸ்டார் கிரிக்கெட்கிளப் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் உட்பட 100 பேர் ரத்ததானம் வழங்கப் பதிவு செய்து ரத்ததானம் அளித்து வருகின்றனர். வி.என்.பாளையம் ஊர்பொதுமக்கள், இளைஞர்கள், சங்ககிரி நகரில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
விழாக்குழுவினர் சார்பில் ரத்ததானம் அளிப்பவர்களுக்கு பல்வேறு வகையான பழங்கள், அசைவ உணவுகள் வழங்கப்பட்டன.