தமிழ்நாடு

நான் இறக்கும் வரையிலும் தமிழக மக்கள் மீதும், மண்ணின் மீதும் மரியாதை செலுத்துவேன்: ராகுல் காந்தி

DIN

கரூர்: நான் இறக்கும் வரை தமிழக மக்கள் மீதும், மண்ணின் மீதும் மரியாதை செலுத்துவேன் என காங்கிரஸின் முன்னாள் தேசியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்தார். 

கரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை 'தமிழகம் மீட்க, விவசாயம் காக்க; 'வாங்க 'ஒரு கை பார்ப்போம்' என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், சின்னதாராபுரம் மற்றும் கரூரில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். 

தமிழக மக்களின் வாழ்க்கை முறை கடினமாகவும், வறுமையில் இருந்தாலும், உங்களது முகத்தில் எப்போதும் புன்னகை இருக்கும். நீங்கள் எத்தனை சிரமத்தில் இருந்தாலும் உங்களது சுயமரியாதையையும், கன்னியத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்.

தமிழர்களின் ஆன்மாவை அறிந்தவர் திருவள்ளுவர். அதனால் திருக்குறளை நான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட 'திருக்குறள் உங்களின் மொழியிலும், கலாசாரத்திலும் இரண்டறக் கலந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடியோ திருக்குறளை மதிக்கவில்லை என கருதுகிறேன். திருக்குறள் புத்தகத்தை அவர் படித்திருந்தால், தமிழர்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மதித்திருப்பார்.

தமிழர்களிடம் சிறிய அன்பை  காட்டினால் கூட'அவர்கள் இருமடங்கு அன்பை காட்டுவார்கள். ஆனால் பிரதமர் மோடியோ  ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே கலாசாரம் என்கிறார். அப்படியானால் தமிழக மக்களுக்கு கலாசாரம், வரலாறு, பண்பாடு, மொழி இல்லையா? அவர் எப்படி தமிழக மக்களைப் பார்த்து ஒரே மொழி, ஒரே கலாசாரம் எனக் கூறலாம். தமிழகமும் இந்தியாவில்தான் உள்ளது என அவர் நினைவில் கொள்ள வேண்டும். 

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தும் மோடி தமிழக அரசின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்க தமிழக முதல்வர் மோடிக்கு என்ன கொடுக்கிறார், இதுதான் எனது முக்கிய கேள்வி. தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலம் மோடி கட்டுப்படுத்துவதுபோல, தமிழக மக்களையும் கட்டுப்படுத்த நினைக்கிறார். ரிமோட்டில் உள்ள பேட்டரியை  வரும் தேர்தலில் தமிழக மக்கள் எடுத்து வீசப்போகிறார்கள். அமைய இருக்கும் அரசை தேர்வு செய்ய நான் வந்திருக்கிறேன். தேர்ந்தெடுக்கப்படும் அரசு விவசாயிகளையும், ஏழை எளிய மக்களையும், மீனவர்களையும் காப்பாற்றக்கூடிய அரசாக இருக்க வேண்டும். 

பிரதமர் மோடி 5 கார்பரேட் முதலாளிகளை காப்பாற்றவே அயராது உழைக்கிறார். ஜிஎஸ்டி, பணமதிப்பு இழப்பு, கரோனா தொற்று காலங்களில் மக்களுக்கு உதவாமல் கார்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி கடனை  தள்ளுபடி செய்து அவர்களுக்கு மட்டுமே உதவி செய்தார். சிறு குறு தொழில்களை ஒழிக்கவும், விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கவும், மக்களை அடிமைப்படுத்தவும்தான் 5 முதலாளிகளுக்கு கடனை தள்ளுபடி செய்தார்.

தமிழக முதல்வர் ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது கண்டித்தாரா? ஜிஎஸ்டி முட்டாள்தனமானது என அறிவிக்க தமிழக முதல்வருக்கு தைரியம் இருந்ததா? 5 முதலாளிகளின் லட்சக்கணக்கான கோடி ரூபாயை தள்ளுபடி செய்தபோது அதை தமிழக முதல்வர் கண்டித்தாரா? இல்லை. ஏனென்றால் முதல்வர் ஊழல் சாம்ராஜ்யத்தில் திளைத்துக் கிடக்கிறார். எடப்பாடி ஊழல் செய்வதால் மோடி மிரட்டுகிறார். இதனால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள். வரும் தேர்தல் எடப்பாடியின் ரிமோட் கண்ட்ரோலில் உள்ள பேட்டரியை எடுத்து வீசும் தேர்தல். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் தமிழக மக்களின் கலாசாரத்திற்கு எதிரானது. தமிழக மக்கள் மீது நாங்கள் என்றும் அன்பை செலுத்துவோம். எனது பாட்டி, எனது தந்தை மீதும், என் குடும்பத்தின் மீதும் எப்போதும்  அன்பை செலுத்துபவர்கள் நீங்கள். "இதனால் தமிழக மக்களையும், மண்ணையும் காப்பாற்ற எனக்கு கடமை இருக்கு. நான் இறக்கும் வரையிலும் தமிழக மக்கள் மீதும், மண்ணின் மீதும் மரியாதை செலுத்துவேன். என்றென்றும் பாதுகாவலனாக இருப்பேன். நன்றி என்றார்.

முன்னதாக கரூர் பேருந்துநிலையம் வந்த அவருக்கு கரகாட்டம், பொய்க்கால்குதிரை உள்ளிட்ட'பாரம்பரிய நடனமம் மூலமும், திருநங்கைகள் கும்பமரியாதை கொடுத்தும் வரவேற்றனர். தொடர்ந்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கரூர் நகர காங். தலைவர் ஆர்.ஸ்டீபன்பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். ராகுல் காந்தியுடன் தமிழக காங். தலைவர் கேஎஸ்.அழகிரி, கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT