மன்னார்குடியில் திங்கள்கிழமை சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது, மது போதையில் ஓட்டிவந்த லாரி மோதி சாலையில் நடுவில் கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
தஞ்சை புதிய வீட்டுவசதிவாரிய குடியிருப்பு குறிச்சிநகர் த.ரமேஷ்(48). இவர், மன்னார்குடியில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சொந்த காரில் வந்தார். மன்னார்குடி, தஞ்சை பிரதான சாலையில் உள்ள திருமணமண்டபத்தின் அருகே காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழியே மணல் சுமை இறங்கிவிட்டு வந்த லாரி நிலைதடுமாறி, கார் மீது மோதிவிட்டு சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி முழுமையாக சேதமடைந்தது. இதனையடுத்து, மன்னார்குடி காவல்நிலைய காவல்துறையினர் மற்றும் தீ நிலையத்தினர் நிகழ்விடத்திற்கு வந்து, கிரேன் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர்.
இது குறித்து புகாரின் பேரில், மன்னார்குடி காவல்நிலைய போலிஸார் வழக்குப் பதிந்து லாரியை ஓட்டி வந்த மன்னார்குடி மேலகோபுரவாசல் என்.சிவா(39) கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் ஓட்டுநர் சிவா குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. சாலையின் நடுவே லாரி கவிழ்ந்து கிடந்ததால் மன்னார்குடி, தஞ்சை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டது.