சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி, துண்டுப் பிரசுரம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டம் ஒழுங்கு காவல், போக்குவரத்து காவல் துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழா ஜன.18 முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, அவிநாசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் தலைமை வகித்து, விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அவிநாசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய இருசக்கர வாகனப் பேரணி, மேற்கு ரத வீதி சேவூர் வழியாக வந்து புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக்கவசங்களும், தலைக்கவசம் அணிந்து வந்த பெண்களுக்கு ரோஜா பூவும், ஆண்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மது அருந்தி வாகனம் ஓட்டுதல், செல்லிடப்பேசிக் கொண்டு வாகனம் ஒட்டுதல் ஆகியவற்றால் ஏற்படும் விபத்து, உயிரிழப்புகள் குறித்தும், தலைக்கவசம், சீட் பெல்ட் உள்ளிட்டவைகள் அணிந்து வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர், ஆய்வாளர்கள் அருள், சரஸ்வதி, முருகேசன், உதவி ஆய்வாளர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.