திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த வேளுக்குடி அன்னை ஸ்ரீ அங்காளப்பரமேஸ்வரி கோயிலில், உலக நன்மைக்காகவும், அமைச்சர் காமராஜ் நலம் பெற வேண்டியும் சிறப்பு யாக பூஜை செய்யப்பட்டது.
தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பூரண உடல் நலம் பெற்று மீண்டும் பொது வாழ்வில் ஈடுபட வேண்டியும், உலக மக்கள் நலம் பெற வேண்டியும், வேளுக்குடி அங்காளப் பரமேஸ்வரி கோயில் பரம்பரை அறங்காவலர் வி.எஸ்.ரமேஸ்குமார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஏற்பாட்டின் படி, சிறப்பு யாக பூஜை செய்தனர்.
அங்காளப் பரமேஸ்வரி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில், ருத்திரக் கோட்டீஸ்வரர் கோயில் குருக்கள் கே.சுப்ரமணிய குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் லலிதா மூல மந்திர நவாச்சரி ஹோமம், மிருத்து ஜெய ஹோமம் உள்ளிட்ட ஹோம மந்திரங்களை எழுப்பி, பூர்ணாஹூதி செய்தனர். தொடர்ந்து, கோயிலில் அங்காளப் பரமேஸ்வரி, விநாயகர், சிவன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனைக் காண்பிக்கப்பட்டன.
இதேபோல், கூத்தாநல்லூர் நகர அதிமுக சார்பில், சித்தாம்பூர் ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்தனர். பூஜையில், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்டச் செயலாளர் எல்.எம்.முஹம்மது அஷ்ரப், நகர அதிமுக துணைச் செயலாளர் உதயகுமார், எம்.ஜி.ஆர். மன்ற நகரச் செயலாளர் ராஜசேகரன், அம்மா பேரவை நகரச் செயலாளர் எஸ்.பி. காளிதாஸ், இளைஞர், இளம் பெண்கள் பாசறை நகரச் செயலாளர் வி.எஸ்.நெடுமாறன், மாணவரணி நகரச் செயலாளர் அ.சொற்கோ, நகர மன்ற முன்னாள் உறுப்பினர் கொய்யா என்ற பி.மீரா மைதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.