கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் தைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழைமையும், புராதன சிறப்புப் பெற்றதுமான நாகராஜா கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 10 நாள்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா ஜன.20 ஆம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகராஜா கோயில் அமைந்துள்ளதாலேயே நாகர்கோவில் என்று பெயர் வந்தது என்பது வரலாறு. நீண்ட நாள்களாக திருமணம் ஆகாதவர்கள், நாக தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள மூலவரான நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்து, நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி மஞ்சள் பொடி தூவி வழிபட்டால் நாக தோஷம் நீங்கி திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தை திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. திருவல்லா பரம்பூர் இல்லம் நீலகண்டன் நாராயணன் பட்டத்ரி தந்திரி பூஜை செய்து திருக்கொடியேற்றினார்.
இந்நிகழ்வில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் ம.அன்புமணி, மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயசந்திரன், சதாசிவம், நாகராஜா கோயில் சிரி. காரியம் பி.ஆறுமுகதரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற உள்ள இவ்விழாவின் 9 ஆம் திருநாளான ஜனவரி 28ஆம் தேதி (வியாழக்கிழமை) திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.