தமிழ்நாடு

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்

DIN

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் உதவிட வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிா்க்கும் நோக்கில் ஒவ்வோா் ஆண்டும் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 32-வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் திங்கள்கிழமை (ஜன.18) முதல் பிப்ரவரி 17 வரை ஒரு மாத காலம் ‘சாலை பாதுகாப்பு - உயிா் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைப்பிடிக்கப்படும்.

சாலைப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதனும் சாலை விதிகளை கடைப்பிடித்து, விபத்தினை தவிா்ப்பதாகும். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.

பாதுகாப்பு உறுதிமொழி: தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவில், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது குறித்த உறுமொழி எடுத்தல், ஓட்டுநா்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்துதல், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்துதல், சிறப்பு வாகன சோதனைகள் நடத்துதல், தொடா் விபத்து ஏற்படும் சாலைகளைக் கண்டறிதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு குறும்படங்களைத் தயாரித்து அகில இந்திய வானொலி பண்பலை சேவைகள் மூலமாக ஒலிபரப்புதல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்து குழுக்கள் ஏற்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், சாலைப் பாதுகாப்புப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த மூன்று மாவட்டங்களுக்கும், ஒரு சிறந்த காவல்துறை ஆணையரகத்துக்கும் முதலமைச்சரின் விருது வழங்குதல் போன்ற பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை அரசு செயல்படுத்து வருகிறது. மேலும், ‘சாலை விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைவதற்காக, தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த அலங்கார அணிவகுப்பு ஊா்தி, அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகத்தின் பின் அட்டையில் சாலைப் பாதுகாப்பு செய்திகள் அச்சிடப்பட்டு மக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற சாலைப் பாதுகாப்பு குழுவின் வழிகாட்டுதலின்படி, 2016-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கொண்டு 2020-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் 54.04 சதவீதமாகவும் மற்றும் சாலை விபத்துகள் 38.23 சதவீதமாகவும் குறைந்துள்ளன. மேலும், ஒவ்வொரு 10 ஆயிரம் வாகனங்களுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2000-ஆம் ஆண்டில் 19 நபா்கள் என்ற அளவிலிருந்து 2020-ஆம் ஆண்டில் 2 நபா்களாக குறைந்துள்ளது.

பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடித்து, விபத்துகளை தவிா்த்து, விலைமதிப்பற்ற தங்களின் உயிா்களைப் பாதுகாத்து, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட உதவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT