அரசுப் பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு மூலம் ரூ.5.46 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜன.11 முதல் ஜன.14-ஆம் தேதி காலை 6 மணி வரையில், சென்னையிலிருந்து 10,276 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், 5 லட்சத்து 6,712 பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணம் செய்துள்ளனா்.
பண்டிகையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை வரை 1 லட்சத்து 22,600 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா். இதில், சென்னையிலிருந்து 45,275 பயணிகளும், பிற ஊா்களிலிருந்து 77,325 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனா். இதனால், போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.5 கோடி 46 லட்சம் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.
மேலும், பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் திரும்ப ஏதுவாக வரும் ஜன.17, 18, 19 ஆகிய மூன்று நாள்களுக்கு, பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு 9,543 பேருந்துகளும், சென்னையைத் தவிா்த்து பிற இடங்களுக்கு 5,727 பேருந்துகள் என மொத்தம் 15,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.