தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) 2,783 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்கியது. இதில் மாலை 5.30 மணி நிலவரப்படி 2,783 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2,684 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், 99 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது:
"தமிழகத்தில் இன்று தடுப்பூசி போடப்பட்ட 2,783 பேரும் 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இன்று முதல் நாள் என்பதால் நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன. நாளை முதல் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சுடன் நடைபெறும்.
சென்னையில் 12 தடுப்பூசி மையங்கள் உள்ளன. இதை மேலும் அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வைக்கப்படுகின்றன."