திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் காவலர்கள்-மக்களிடையே நல்லுறவு வளர்க்கும் நோக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மினி மராத்தான் போட்டியில் காவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் காவலர்கள் மற்றும் மக்கள் நல்லுறவை வளர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பயிற்சி காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோருக்கான 5 கி.மீ தூரம் கொண்ட மினி மராத்தான் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பிருந்து தொடங்கி மினி மராத்தான் போட்டியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கி, திருப்பாச்சூர், டோல்கேட், ஐ.சி.எம்.ஆர், பூண்டி சாலை வழியாக எஸ்.பி குடியிருப்பு, சுற்றுலா மாளிகை, ஆட்சியர் குடியிருப்பு முகாம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானம் முன்பு நிறைவு பெற்றது. 5 கி.மீ தொலைவு கொண்ட மராத்தான் போட்டியில் காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன், காவல் ஆய்வாளர் ரவிகுமார் உள்பட 50 பயிற்சி காவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 60 பேர் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், சிறப்பிடம் பெற்ற காவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மாலையில் பரிசளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.