எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில், சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில், 7000 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 85 லட்சத்திற்கு விற்பனையானது.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் கூட்டுறவு ஏலமையத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வகை தரும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்திகளை, இங்கு நடைபெறும் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் பருத்தி அறுவடை அதிகரித்துள்ள நிலையில், இம்மையத்தில் விற்பனைக்கு வரும் பருத்தியின் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை அன்று நாள் முழுதும் நடைபெற்ற பொதுஏலத்தில் ரூ. 1கோடியே 85 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.
சனிக்கிழமை அன்று கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நடைபெற்ற பொது ஏலத்திற்க்கு வந்திருந்த 7000 பருத்தி மூட்டைகள் 1250 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, வேளாண் விற்பனை மைய அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5469 முதல் ரூ.6499 வரை விலைபோனது. அதேபோல் டி.சி.ஹச் ரக பருத்தியானது. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7160 முதல் ரூ.7926 வரை விலைபோனது.
நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1.85 கோடிக்கு பருத்தி வணிகம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் ஏலத்தில் பங்குகொண்டு, பருத்தியினை மொத்த கொள்முதல் செய்தனர். நிகழ் வாரத்தில் பருத்தி விலையானது கடந்தவாரத்தினை விட குவிண்டாலுக்கு ரூ.200 முதல் 500 வரை விலை உயர்வு கண்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாகப் பருத்தி விவசாயிகள் தெரிவித்தனர்.