மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கீழடியில் கடந்த வாரம் ஏழாம் கட்ட அகழாய்வை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்தார். தற்போது அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்கள், நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கீழடிக்கு புதன்கிழமை வருகை தந்தார். அவரை அங்கிருந்த தொல்லியல் துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பின்னர் அவர், கீழடியில் அகழாய்வுக்காக தோண்டப்பட்டு வரும் குழிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏற்கெனவே, நடைபெற்று முடிந்த ஆறாம் கட்ட அகழாய்வு குறித்தும், தொடங்கப்பட்டுள்ள ஏழாம் கட்ட அகழாய்வு குறித்தும் அவர் கேட்டறிந்தார்.