தருமபுரி: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தையொட்டி தருமபுரி மண்டலத்தில் 60 சதம் பேருந்துகள் மட்டும் இயங்கின.
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வைப்புநிதி ரூ.7 ஆயிரம் கோடி திருப்பி வழங்க வேண்டும். மாதந்தோறும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை மீண்டும் அவர்களது கணக்கில் சேர்க்க வேண்டும்.
கடந்த 2003 ஏப்ரல் மாதத்துக்கு பின்பு பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஜடியு, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி தருமபுரி மண்டலத்தில் தருமபுரி மாவட்டத்தில் ஏழு பணிமனைகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்டத்தில் ஆறு பணிமனைகள் மற்றும் சேலம் அஸ்தம்பட்டி, திருப்பத்தூர் பணிமனைகள் சேர்த்து மொத்தம் 15 பணிமனைகள் உள்ளன. இதில் 910 நகரம் மற்றும் புறநகர்ப் பேருந்துகள் இயங்குகின்றன. இவற்றில் வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி 60 சதவீதம் பேருந்துகள் இயங்கின.