திருப்பூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததை ஒட்டி 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
பின்னலாடைத்தொழில் நகரமான திருப்பூரில் பேருந்து பயணத்தை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்தநிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கின. அதிலும் மாநகரில் 152 அரசு பேருந்துகள் உள்ள நிலையில் 33 பேருந்துகள் மட்டுமே இயங்கின. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகினர். அதே வேளையில், தனியார் பேருந்துகளில் வழக்கத்தை விடக் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
இது குறித்து அரசு போக்குவரத்துக்கழக வணிகப்பிரிவு மேலாளர் செல்லப்பனிடம் கேட்டபோது, மாவட்டத்தில் உள்ள 520 பேருந்துகளில் 50 சதவீதம் இயக்கப்படுகிறது என்றார். முன்னதாக காங்கயம் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் அதிக அளவிலான பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.