சென்னை: நம் தலைவர்கள் காட்டிய வழியில் ஒற்றுமையுடன் இருந்தால் எதிரிகளை வெல்ல முடியும் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக தலைமையகத்தில் அதிமுக தொண்டர்களான பிரதாப் சிங், ராஜேஷ் ஆகியோர் தாக்கப்பட்டது வேதனையளிக்கிறது. இனியும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது.
மேலும் தொண்டர்களின் நலனில் அக்கறை செலுத்தும்போதுதான் அதிமுகவின் மீது நல்ல எண்ணம் உருவாகும். எந்த இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதிக்க வேண்டும்.
ஒரு இயக்கத்துக்கு தேவை கொடி பிடிக்கும் தொண்டர்களே தவிர, தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல. நாம் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே எதிரிகளை வெல்ல முடியும் என்பதன் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும். இன்று அதிமுக தொண்டர்களின் நிலையை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கண்ணீருடன் பார்த்து கொண்டிருப்பார்கள் என சசிகலா கூறியுள்ளார்.