தமிழகத்தில் ஆகஸ்ட் 7 முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று மற்றும் நாளை, நீலகிரி, கோவை, சேலம், மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும், மேற்குதொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள திருப்பூர், தென்காசியில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு..
இன்று முதல் ஆக. 8 வரை தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.