சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தொற்று உறுதியானவா்களைக் கண்டறிதல், அவா்களைத் தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது சென்னையில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், மருத்துவப் பரிசோதனையை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 25,000 முதல் 30,000 பேருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் கரோனா தொற்று பரவுதல் படிப்படியாக உயரத் தொடங்கி உள்ளதை அடுத்து, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான சந்தைகள், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், அரசு அறிவித்துள்ள தளா்வுகளுக்கு உட்பட்டு இயங்கும் இதர அங்காடிகள் ஆகிய இடங்களில் பணிபுரிவோருக்கு சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) வரை 23,86,986 மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினா்.