பொது மக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், தண்ணீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோடைகாலம் துவங்கி இருக்கும் நிலையில் கோடையின் உச்சிவெயிலை நினைவு படுத்தும் அளவிற்கு, இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. எனவே தமிழக மக்கள் இந்த கோடைகாலத்தை சமாளிப்பதற்கு தேமுதிக சார்பில் நம்மால் இயன்ற உதவிகளை செய்திட வேண்டும். ஆண்டு தோறும் நம்முடைய கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு உதவிட, தண்ணீர் பந்தல்கள் அமைத்து தங்களால் இயன்ற அளவிற்கு உதவுவது வழக்கம்.
அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம், ஊராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி மற்றும் கரோனா பரவிவருவதால் மாஸ்க், சானிடைசர் போன்றவைகளை பொது மக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சீரிய பணிக்கு என்றும் போல் எனது இதயமார்ந்த வாழ்த்துக்கள் உண்டு. இக்கோடைகாலம் முழுவதும் இப்பணியினை செயல்படுத்த வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.