சென்னை: குடலிறக்க அறுவைச் சிகிச்சைக்காக சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, அறுவை சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.
சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் நேற்று முதல்வர் பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் மூன்று நாள்களுக்கு முழு ஓய்வு எடுக்குமாறு முதல்வர் பழனிசாமியை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முதல்வா் பழனிசாமிக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் கோ் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டாா். அப்போது, அவருக்கு குடலிறக்கம் (ஹொ்னியா) பிரச்னை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.
ஆனால், அப்போது தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் தொடங்கியிருந்ததால், அவா் மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொள்ளவில்லை. இதற்கு நடுவே, அதிமுகவை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் முதல்வா் ஈடுபட்டாா். தற்போது வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், குடலிறக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் முதல்வா் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை (நெகட்டிவ்) என்பது தெரியவந்தது. அதன் பின்னா் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல்வரின் உடல் நிலை சீராக இருந்ததால், அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.