அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி ஒன்றியம் மறையூர் கிராம இளைஞர்கள் மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக கிராமத்தின் முக்கியப் பகுதிகள் மற்றும் கண்மாய்க்கரை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு தங்களின் அன்பையும் வணக்கத்தையும் வெளிப்படுத்தினர்.
திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகே உள்ளது மறையூர் கிராமம். இக்கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் ஆசியின்படி நடிகர் விவேக் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாலும், அவரது வழிப்படி மரக்கன்றுகள் நட அவ்விளைஞர்கள் முடிவு செய்தனர்.
இதன்படி ஞாயிற்றுக்கிழமை மறையூர் கிராமத்தின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிறுத்தம், கோவில் வளாகங்கள், ஊர்ப் பொது இடங்கள் மற்றும் மண் அரிப்பைத் தடுக்கும் விதமாக கண்மாய்க்கரை ஆகிய பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை புங்கைமரம், வேப்பமரம், வாகை மரம் ஆகிய மரக்கன்றுகளை நட்டு மறைந்த நடிகர் விவேக்கிற்கு தங்களின் அஞ்சலியையும், அன்பையும், வணக்கத்தையும் வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மறையூர் கிராம இளைஞர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும், மறைந்த அப்துல் கலாம் மற்றும் நடிகர் விவேக் ஆகியோரின் வழியில் மரக்கன்றுகள் நடும் பணியைத் தாங்கள் விரிவுபடுத்த இருப்பதாகவும் அவ்விளைஞர்கள் தெரிவித்தனர்.