சென்னை: நடிகர் விவேக் கவலைக்கிடமான நிலையில் எக்மோ கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்குக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர் சிகிச்சை பெற்று வரும் சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
மேலும், விவேக் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இன்று காலை 11 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக நடிகர் விவேக்கை சுயநினைவில்லாத நிலையில், அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவ நிபுணர்கள் மூலம் அவசர முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது இதயத்துடிப்பு குறைவாக இருந்தது. உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டு, பிறகு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில், எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறார்.
24 மணி நேரம் கண்காணித்த பிறகுதான் அவரது உடல்நிலை குறித்து கூற முடியும். நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.