கம்பம், கூடலூர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டம் குளிர்ச்சியான மாவட்டம் எனப் பெயரெடுத்தும், வெப்ப காலங்களில் பெரும் பிரச்சனை நிலவுகிறது.
பகலில் கொளுத்தும் வெப்பத்தினால், கடைவீதிகளில் கூட நடக்க முடியவில்லை. வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கம்பம் கூடலூர் ஆகிய பகுதிகளிலிருந்தும் வெப்பம் கொளுத்துகிறது. இதேபோல் கடுமையான மழைக் காலங்களில் மழை பெய்தபோதும், வெப்ப காலங்களில் மழை என்பது மகிழ்ச்சிக்குரியதே.
அந்த வகையில், கம்பம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெய்த மழையால் திங்கள்கிழமை ஓரளவு குளிர்ச்சி கிடைத்தது. அதேநேரத்தில் சுருளி மலைப்பகுதிகளில் மழை பெய்யாததால் அருவியில் நீர்வரத்து இல்லை.
இதேபோல் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் எதிர்பார்த்த மழை பெய்யாததால் அணைக்குள் நீர்வரத்து இல்லை. திங்கள்கிழமை நிலவரப்படி பெரியாறு அணையில் நீர்மட்டம் -126.30(142) அடியாகவும்,
நீர் இருப்பு :3899 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை பெரியாறு அணைப்பகுதியில் 4.4 மில்லி மீட்டரும், தேக்கடியில் 3.2 மி.மீ. மழையும் பெய்தது. அணையிலிருந்து தமிழகத்திற்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 100 கன அடியாக இருந்தது.