தமிழ்நாடு

வாலாஜா அருகே கரி மண்டியில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்டிருந்த 13 போ் மீட்பு

DIN



வாலாஜா அருகே கரி மண்டியில் மரக்கரி தயாரிக்கும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்டிருந்த13 போ் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனா்.

வாலாஜா வட்டம், அனந்தலை மதுரா, மேல்புதுப்பேட்டை கிராமத்தில் இயங்கி வரும் அருண் டிரேடர்ஸ் கரி மண்டி இடத்தில் மரக்கரி தயாரிக்கும் வேலையில் ஈடுப்பட்டிருந்த வாலாஜா வட்டம், குடிமல்லூர் கிராமம், கால்வாய் கரை, அணைக்கட்டு ரோடு என்ற முகவரியில் வசிக்கும் சங்கர், சித்ரா, செல்வி.சத்யா, சீனு, செல்வி.மகாலட்சுமி, சரத்குமார், தேவி, செல்வன்.சந்தோஷ், செல்வன்.ரஞ்சித், செல்வன்.பார்த்தீபன், பச்சையப்பன், கோவிந்தம்மாள், செல்வி.ரேணுகா, ஆகியோர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் மற்றும் வாலாஜா வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அருண் டிரேடர்ஸ் கரி மண்டி உரிமையாளர் அருண்குமார் (எ) குட்டி த/பெ.ராமலிங்கம் (41) மற்றும் அவருடைய ஒட்டுநர் தென்றல் த/பெ.நேதாஜி (27) ஆகியோரிடம் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் விசாரணை செய்தார். 

இந்த தொழிலாளர்கள் இருளர் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர்கள் என்றும், இவர்கள் மரம் வெட்டி கரிமூட்டம் போட்டு மரக்கரி தயாரிக்கும் வேலை செய்து வருவதாகவும், இந்த வேலை செய்ய தங்களுக்கு முன்பணக் கடன் தந்து அதை திரும்ப கட்டும் வரை தொடர்ந்து வேலை வாங்கி வருவதாகவும், வேலை செய்த கூலி கணக்குகளை தங்களுக்கு முழுமையாக காட்டாமல் வெற்று பேப்பரில் பாண்டு எழுதி வாங்கிக் கொண்டு கடுமையாக வேலை வாங்குவதாகவும், சரியாக வேலை செய்யவில்லை என்று அடித்து துன்புறுத்தப் படுவதாகவும் தெரிவித்தனர். விசாரணையில் இந்த கரிமண்டி உரிமையாளர் இந்த தொழிலாளர்கள் முன்பண கடன் திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒரு ஊரில் இருந்து கட்டாயப்படுத்தி டாட்டா ஏஸ் வண்டியில் அழைத்து வந்து வேலை செய்ய வைப்பது தெரிய வந்துள்ளது. 

இது தொடர்பாக அடுப்புக்கரி மண்டி ஊரிமையாளர்  அருண்குமார் என்பவரிடமிருந்து, இந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட முன்பண பதிவேடுகள், கூலி பதிவேடுகள், முன்பண கடன் அளித்ததற்காக தொழிலாளிகளிடம் வெற்று பேப்பரில் கையொப்பம் பெறப்பட்ட பாண்டுகள், ராணிப்பேட்டை சார் ஆட்சியரால் கைப்பற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.  விசாரணையின் முடிவில் இராணிப்பேட்டை உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் சார் ஆட்சியர் அவர்கள் மேற்குறிப்பிட்ட  3 குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள், 4 ஆண்கள், 4 குழந்தைகள் உள்பட , 13 நபர்களை கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் 1976 பிரிவு 12-ன் கீழ் கொத்தடிமை தொழிலாளர் முறையிலிருந்து விடுவித்தும், பிரிவு 6-ன் கீழ் அவர்களது கொத்தடிமை கடன்கள் ரூ. 2,63,900 ஐ ரத்து செய்தும் உத்திரவிட்டுள்ளார். 

இவ்வுத்தரவின்படி, அனந்தலை கிராம நிர்வாக அலுவலர் அதியமான் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில்  மேற்கண்ட தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வந்த அருண் டிரேடர்ஸ் கரி மண்டி உரிமையாளர் திரு.அருண்குமார் (எ) குட்டி, அவரது ஓட்டுநர் மற்றும் மேற்பார்வையாளர் திரு.தென்றல் த/பெ.நேதாஜி ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய புகார் அளித்துள்ளார். இதன் மீது வாலாஜாபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  10.4.2021 அன்று மதியம் முதல் நல்லிரவு வரை நடைபெற்ற இந்த கொத்தடிமை தொழிலாளர் மீட்பு நடவடிக்கையில் இராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் தலைமையில், வாலாஜா வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், துணை வட்டாட்சியர் விஜயசேகர், வருவாய் ஆய்வாளர் சோனியா, கிராம நிர்வாக அலுவலர் அதியமான், தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் ஆனந்தன், வாலாஜா காவல் உதவி ஆய்வாளர் பிரபாகர், சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கட் ரமணன் ஆகியோர் அடங்கிய அடங்கிய அலுவலர்கள், கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களது வீடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT